பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், வந்தவாசி மகள் வினோ சுப்ரஜாவுக்கு பெருமைமிகு அங்கீகாரம்!

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் The Global Women Empowerment Award 2025 விருது பெற்றதன் மூலம், சர்வதேச நிலைத்தன்மைமிக்க ஃபேஷன் முன்னோடி என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார் நமது வந்தவாசியைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் ஆதிகேசவலு அவர்களின் மகள் வினோ சுப்ரஜா. 

முன்னதாக, நாடாளுமன்ற அரங்கில் , ஃபேஷன் துறை தொழிலாளர்களின் உரிமைகளையும், தெருக்கூத்து கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பற்றி வினோ சுப்ரஜா பேசினார். 

இந்த விருது குறித்து அவர் தெரிவிக்கும் போது, “என் வாழ்க்கையில் ஒரு முக்கிய சாதனை மட்டுமல்ல; இது ஃபேஷன் மற்றும் கைவினை கலைஞர்களின் சக்தியை நிரூபிக்கும் ஒரு மகத்தான அங்கீகாரம்” என்றார். 

மேலும், “ஃபேஷன் வெறும் அழகுக்காக மட்டுமல்ல; அதை உருவாக்கும் கைகளைப் பற்றியதும் கூட. ஒவ்வொரு கலைஞரும் மதிப்பும், நியாயமான ஊதியமும், அங்கீகாரமும் பெற வேண்டும். தெருக்கூத்து எவ்வாறு எதிர்ப்பையும் அடையாளத்தையும் கூறுகிறதோ, அதுபோலவே நம் நெசவாளர்களின் குரலும் உலகளவில் கேட்கப்பட வேண்டும். பாரம்பரியத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாக இந்த மேடையைப் பயன்படுத்தியதில் பெருமை கொள்கிறேன்.” என்றார்.

யார் இந்த வினோ சுப்ரஜா?

வந்தவாசி தேரடியில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்த ஆதிகேசவலு அவர்களின் மகள் வினோ சுப்ரஜா. இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு தளங்களில் ஃபேஷன் டிசைனிங் மூலமாக தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். எங்கு சென்றாலும், தமிழையும், பிறந்த வந்தவாசி மண்ணையும் பெருமைப்படுத்துவதை தவறியதில்லை. அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவமான புரிசை தெருக்கூத்தை உலகப் புகழ்பெற்ற லண்டன் ஃபேஷன் வீக் மேடை ஏற்றி பெருமை சேர்த்துள்ளார்.

புதியது பழையவை

About Me

WhatsApp Button