திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன்படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42 (பி)-ன்படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளது.
அதற்கு உட்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் பெயர் பலகையில் கடை, நிறுவனத்தின் பெயரினை பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களிலும், பிறகு ஆங்கிலம் மற்றும் பிற மொழியில் குறிப்பிடப்படும் கடை, நிறுவனத்தின் பெயரினை தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவிலான எழுத்துக்களிலும் பெயர் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, வணிகர் சங்க பிரதிநிதிகள், உணவு நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்பவர் தரப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர்.
இக்குழுவினர் மூலம் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி அடுத்த மாதம் (மே) 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என்பதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் மே மாதம் 15-ந்தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், உணவு நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்பவர் தரப்பு பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தை தவிர்க்க வேண்டும்.