திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சர்புத்ரியம்மன் சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் 2 தேர்களில் ஜலகண்டேஸ்வரர், சர்புத்திரி தாயார் தனித்தனியாக வலம் வந்தனர். பின்னர் 2 தேர்களையும் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள ஷெட்டில் நிறுத்தி இரும்பு ஷட்டர் போட்டு பூட்டினர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஜலகண்டேஸ்வரர் சென்றுவந்த தேரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தேரின் மேற்பகுதி உச்சியில் கருகியது. தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக வந்தவாசி பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.