திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.