வந்தவாசி நகரின் நுழைவு பகுதியில், பாதிரி கிராமத்திற்கு உட்பட்ட ஏரிக்கரையில் சில வியாபாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், வட்டாட்சியர், காவல்துறை என எல்லா தரப்பிடமும் முறையிட்டும்.. மிக தைரியமாக மீண்டும் மீண்டும் கழிவுகளை கொட்டி, சுற்றுச்சூழலை கெடுப்பதோடு, நோய் பரவும் அபாயத்தை உண்டாக்கும் சமூக விரோத செயலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பாதிரி கிராம வளர்ச்சி குழு சார்பில், இறைச்சிக் கொட்டும் வியாபாரிகளின் செயலை தடுப்பதோடு, ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, வந்தவாசி நகரமன்ற தலைவர் திரு ஜலால், காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி, ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அதேப்போல், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு முறையிடப்பட்டது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும், நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இது ஒரு நாள் நடவடிக்கையாக இல்லாமல், நிரந்தர தீர்வாக ஏரிக்கரையை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள், பாதிரி கிராம வளர்ச்சி குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.