மத்திய அரசின் வேளாண்மை வளர்ச்சிக்கான விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் பிரச்சார இயக்கத்தின் 14வது நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின் படி விவசாய விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு நாடு முழுவதும் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் நெல்லி வேளாண்மை அறிவியல் மையத்தின் சார்பில் வெம்பாக்கம் ,செய்யாறு ,அனைக்காவூர், ஆரணி ,வந்தவாசி ,ஆகிய வட்டாரங்களில் 45 கிராமங்களில் 15 நாட்கள் நடைபெற்று வருகிறது.
இப்பிரச்சார இயக்கத்தின் 14 வது நாளான இன்று வந்தவாசி வட்டாரத்தில் உள்ள மருதாடு, கல்லாங்குத்து , மற்றும் வழூர் அகரம் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானியும் ,மையத்தின் தலைவருமான சுரேஷ்,கோவை கரும்பு இனப்பெருக்க நிலைய விஞ்ஞானி லட்சுமிபதி, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சார்லஸ் ஜீவா மற்றும் கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப நல்லுநர்கள் நாராயணன் ,மாயகிருஷ்ணன் ,சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டு காரீப் பட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை வழங்கினார்கள்.
ஸ்பிக் நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தது. ஸ்பிக் நிறுவன மண்டல மேலாளர் பாலமுருகன், மாநில விற்பனை அலுவலர் ஜெயபாலன் அரவிந்த் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையை சார்ந்த விஜய்கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனம் சார்ந்த தொழில் நுட்பத்தை கூறினர்
மத்திய அரசு செயல்படுத்தும் வேளாண்மை திட்டங்களான பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டம் ,பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான பாசன திட்டம், ,மின்னனு வேளாண் சந்தை ,கால்நடை வளர்ப்பு ,மகளிர் குழு மானிய திட்டங்கள் ,ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் ,மானியத்தில் ட்ரோன் வாங்குதல் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இன்று மூன்று கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.