திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

திருவண்ணாமலை மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்ளுக்கான உதவித்தொகை திட்டம் மூலம் உதவித்தொகை பெறுவதற்கு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வி தகுதிகள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் கடந்த 31-ந்தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்கு உள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலை வாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட சான்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அடுத்த மாதம் (மே) 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை புரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம்.




புதியது பழையவை