வந்தவாசியில் செப்டம்பர் 13-ந்தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டு பதிவு, தொழிற்பழகுனர் பயிற்சி பதிவு, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், நர்சிங், பார்மசி தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் முகாம் நடைபெறும் நாளில் வந்தவாசி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரிக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

