கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக, இலகுரக வாகனங்கள் திருவண்ணாமலை வழியாக செல்ல வருகிற டிசம்பர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்.பி. சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். எனவே வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை 4 நாட்கள் திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர், வாணியம்பாடி, வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக செல்ல வேண்டும். மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதையாக வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூர், வாணியம்பாடி, பர்கூர் வழியாக செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் வேட்டவலம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
திருப்பதி, கே.ஜி.எப்., வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி வழித்தடங்களில் இருந்து திருப்பதி, கே.ஜி.எப்., வேலூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூர் வழியாக செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் வேட்டவலம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தர்மபுரி, தொப்பூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் வழியாக செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.
விருதாச்சலம், சிதம்பரம், நாகப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம், தொப்பூர், தர்மபுரி வழியாக செல்ல வேண்டும். இந்த வாகனங்கள் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
இந்த வழித்தடங்களில் வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்ட தேதி வரை செல்ல வேண்டும்.

