திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா (PM National Apprenticeship Mela) மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் செய்யாறு சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுனர் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி.வி.டி. முறையில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று 2024-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற, 2024-ம் ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தொழிற் பழகுனராக இந்த பயிற்சியில் சேரலாம்.
ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8, 10, 12-ம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறலாம்.
இம்முகாமிற்கு வரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எடுத்து வர வேண்டும்.