இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிட மேல்மா சிப்காட் திட்டம் (அலகு 3) விரைவில் நிறைவேற்றப்படும் என்று எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமாா் 54 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிப்காட்டை விரிவாக்கம் செய்வதற்கு, அந்தப் பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.விவசாய நிலத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்ட சிப்காட் நில எடுப்பு வருவாய்த்துறையினரை அங்கிருந்தவா் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, செய்யாறு எம்எல்ஏ அலுவலகத்தில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், ஒ.ஜோதி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
செய்யாறு தொகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் செய்யாறு சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்கி வைத்துள்ளார். சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களில் 3,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலர் அரசியல் லாபத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் விவசாயிகள் என்ற போர்வையில் இந்த மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் சில விவசாயிகளை தூண்டிவிட்டு சிப்காட் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் சிப்காட் வேண்டுமென்று பல ஆயிரம் விவசாயிகள் போராடினர். இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தை எடுத்து கொண்டு பணத்தை விரைந்து தரும்படி எங்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டு ஆட்சி செய்யும் மத்திய பா.ஜ.க. அரசு ஆண்டிற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார்.
செய்யாறு மற்றும் சுற்றியுள்ள தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட மேல்மா சிப்காட் திட்டம் நிறைவேற்றப்படும். சிப்காட் நிலம் எடுப்பு சம்பந்தமாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.