பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெற சிறப்பு முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரியின் கவுரவ நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் பொது சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் கட்டண வங்கியினையும் அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் 20-வது தவணை நிதி வருகிற ஜூன் மாதம் விடுவிக்கப்பட உள்ள நிலையில் தகுதியுடைய விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது, நில உடைமைகளை பதிவேற்றம் செய்து கொள்வது மற்றும் அனைத்து விதமான பி.எம்.கிசான் தொடர்பான விவரங்களை சரிசெய்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் இதுவரை சேர்ந்து பயனடையாத விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளும் ஏற்கனவே பதிவு செய்து பயன்பெற்று பல்வேறு காரணங்களால் தற்போது நிதி உதவி நிறுத்தப்பட்ட பயனாளிகளும் இந்த முகாமிற்கு வந்து பயனடையலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வந்த விவசாயி மரணமடைந்திருந்தால், அவர்களது தகுதியுடைய வாரிசு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது பெயருக்கு இத்திட்டத்தில் புதியதாக பதிவு செய்து பயனடையலாம்.
இறந்த பயனாளிகளின் விவரங்களை சமர்ப்பிக்காமல், இறந்த பிறகும் தொடர்ந்து தவணைத்தொகை பெறப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வரும் பட்சத்தில் தவறுதலாக பெறப்பட்டத் தொகை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
எனவே இறந்த பயனாளியின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியினை நிறுத்தவும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வாரிசுதாரர் புதிதாக பதிவு செய்து இத்திட்டத்தில் பயனடையவும் அறிவுறுத்தப்படுகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தில் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமையை பதிவு செய்தால் தான் ஜூன் மாதம் வழங்கப்படவுள்ள 20-வது தவணை நிதி பெற இயலும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை நில உடமைப் பதிவு செய்யாத பி.எம்.கிசான் 32 ஆயிரத்து 721 பயனாளிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து பயனடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பி.எம்.கிசான் தொடர்பான அனைத்து மனுக்களுக்கும் இந்த முகாமில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வழிவகை செய்யப்படும் என்பதால் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.